"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

4/09/2014

என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஸஹாபாக்களின் தனிச் சிறப்பை எவருமே மறுக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு வாழ்ந்து அவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர்களின் மதிப்பை இந்த உம்மத்தில் எந்த இமாம்களும் அவ்லியாக்களும் அடைய முடியாது. காலமெல்லாம் இறை வழிபாட்டில் செலவு செய்தாலும் ஒரு சஹாபியின் அந்தஸ்தை எவரும் பெறவே முடியாது. இது ஷியாக்களைத் தவிர இந்த உம்மத்துக்கள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக் கொண்ட பேருண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக்குகின்றன

.
எனது தோழர்களை ஏசாதீர்கள். உங்களில் எவரும் உஹது மலை அளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அந்த ஸஹாபாக்கள் இரு கையளவு செய்த தர்மத்துக்கோ அல்லது அதில் பாதியளவு செய்த தர்மத்துக்கோ ஈடாக முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரீ (ரலி)  நூல்: புகாரி 3673
நபித் தோழர்களின் தனிச் சிறப்பை எடுத்துரைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த நற்சான்று ஒன்றே போதுமானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் எவரும் அவர்களின் நிலையை எட்டவே முடியாது என்ற தகுதியை விட வேறு எந்தத் தகுதி உயர்ந்ததாக இருக்க முடியும்?
நபித் தோழர்களின் தூய்மையான எண்ணமும், மிகச் சிரமமான காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் நின்று செய்த தியாகங்களும் மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்தும் வெற்றி பெறுவோமா என்பது தெரியாத நிலையில் போர் முனைக்குச் சென்ற நெஞ்சுறுதியும் சுட்டெரிக்கும் பாலை மணலில் பொசுக்கப்பட்ட போதும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட போதும் இரு கூராகப் பிளக்கப்பட்ட போதும் ஈமானில் அவர்களுக்கு இருந்த பிடிப்பும் இன்று நினைத்தாலும் நம் கண்களைக் கலங்க வைத்து விடுகின்றது. (ரலியல்லாஹு அன்ஹும் வரழூ அன்ஹு
இவ்வளவு சிறப்பு மிக்க நிலையை எவர் தான் அடைய முடியும்? ஆனால் இன்று சிலர் ஸஹாபாக்களின் சிறப்பை எடுத்துச் சொல்கிறோம் என்று கூறிக் கொண்டு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களின் மூலம் ஸஹாபாக்களின் சிறப்பை நிலை நாட்டத் துவங்கியுள்ளனர்.  அவ்வகையில் மேடைகள் தோறும் முழங்கப்படுகின்ற ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.

أصحابي كالنجوم فبأيهم إقتديتم إهتديتم
அஸ்ஹாபீ கன்னுஜ‚மி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்
பொருள் : என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள் அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்.
இப்படி ஒரு ஹதீஸை பல மவ்லவிகள் கூறுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஹதீஸ் ஒரு சில நூல்களில் இடம் பெற்றிருந்தாலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளன. இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற கருத்தும் குர்ஆன் ஹதீஸ் போதனைக்களுக்கு முரண்படுகின்றது. முதலில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்போம்.
இந்த ஹதீஸை இமாம் இப்னு ஹஸ்மு ரஹ் அவர்கள் தமது அல்இஹ்காம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதைப் பதிவு செய்த அதே இமாம் அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி இது ஏற்கத் தகாத ஹதீஸாகும் என்று குறிப்பிடுகிறார்கள்.

وأما الرواية: أصحابي كالنجوم فرواية ساقطة، وهذا حديث حدثنيه أبو العباس أحمد بن عمر بن أنس العذري قال: أنا أبو ذر عبد بن أحمد بن محمد الهروي الانصاري قال: أنا علي بن عمر بن أحمد الدارقطني، ثنا القاضي أحمد كامل بن كامل خلف، ثنا عبد الله بن روح، ثنا سلام بن سليمان، ثنا الحارث بن غصين، عن الاعمش، عن أبي سفيان، عن جابر قال: قال رسول الله (ص): أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم.
قال أبو محمد: أبو سفيان ضعيف، والحارث بن غصين هذا هو أبو وهب الثقفي، وسلام بن سليمان يروي الاحاديث الموضوعة، وهذا منها بلا شك، فهذا رواية ساقطة من طريق ضعيف إسنادها.
الأحكام لابن حزم [6 /810]
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய அபூ சுஃப்யான் என்பார் பலவீனமானவர். ஸலாம் இப்னு ஸுலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். இந்த ஹதீஸும் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும் என்று இமாம் இப்னு ஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.    (அல்இஹ்காம் பாகம் 6, பக்கம்:28)
இந்த ஹதீஸை இமாம் இப்னு அல்தில்பர் அவர்களும் தமது ஜாமிவுல் இல்ம் என்ற நூலில் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்து விட்டு அதன் அடியில்

1080 - حدثنا محمد بن إبراهيم بن سعيد ، قراءة مني عليه أن محمد بن أحمد بن يحيى ، حدثهم قال : نا أبو الحسن محمد بن أيوب الرقي قال : قال لنا أبو بكر أحمد بن عمرو بن عبد الخالق ، سألتم عما يروى عن النبي صلى الله عليه وسلم مما في أيدي العامة يروونه عن النبي صلى الله عليه وسلم أنه قال : « إنما مثل أصحابي كمثل النجوم » أو « أصحابي كالنجوم فأيها اقتدوا اهتدوا » ، هذا الكلام لا يصح عن النبي صلى الله عليه رواه عبد الرحيم بن زيد العمي ، عن أبيه ، عن سعيد بن المسيب ، عن ابن عمر ، عن النبي صلى الله عليه وسلم وربما رواه عبد الرحيم عن أبيه ، عن ابن عمر ، وأسقط سعيد بن المسيب بينهما وإنما أتى ضعف هذا الحديث من قبل عبد الرحيم بن زيد ؛ لأن أهل العلم قد
سكتوا عن الرواية لحديثه ، والكلام أيضا منكر عن النبي صلى الله عليه وسلم
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இடம் பெறுகின்ற அப்துர்ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ பலவீனமானவர். இது நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் என்றும் குறிப்பிடுகிறார்கள். பஸ்ஸார் என்ற நூலிலும் மேற்கண்ட அப்துர்ராஹீம் அல் அம்மீ வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதுவும் பலவீனமானதாகும்.
(ஜாமிவுல் இல்ம், பாகம் 2.பக்கம் 91)

حديث أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم عبد بن حميد في مسنده من طريق حمزة النصيبي عن نافع عن بن عمر وحمزة ضعيف جدا
முஸ்னத் அப்த் பின் ஹுமைத் எனும் நூலிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் ஹம்ஸா அன்னஸீபீ என்பார் மிகவும் பலவீனமானவர்.
 தாரகுத்னீயிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ورواه الدارقطني في غرائب مالك من طريق جميل بن زيد عن مالك عن جعفر بن محمد عن أبيه عن جابر وجميل لا يعرف
இதன் அறிவிப்பாளர் ஜமீல் பின் ஸைத் யாரென அறியப்படாதவர்.
இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம்கள் இது இட்டுக்கட்டப்பட்டது என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்கள். இதன் பின்னரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இதை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார்களே அதுதான் வியப்பாக உள்ளது.
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள் என இமாம் இப்னு குதாமா தமது அல்முன்தகப் என்ற நூலில் குறப்பிட்டுள்ளார்கள்.
அதே கருத்தை உணர்த்தக் கூடிய வேறு வார்த்தைகளை கொண்ட ஹதீஸ்கள் பல உள்ளன. அவை அனைத்தையும் இட்டுக்கட்டப்பட்டவையாகவே அமைந்துள்ளன. இனி கருத்துக்கள் அடிப்படையில் இந்த ஹதீஸை ஆராய்வோம்.
முதல் தவறு
நபி ஸல் அவர்கள் மிகவும் இலக்கியத் தரத்துடன் பேசக் கூடியவர்கள். அவர்களின் ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் அவர்கள் வார்த்தைகளைக் கையாளும் விதமும் உவமை நயமும் பண்டிதர்களையும் திகைக்கச் செய்து விடுமளவுக்கு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கும்.
ஆனால் இந்த ஹதீஸில் காட்டப்பட்டுள்ள உவமைகளை நோக்கும் போது நபி ஸல் அவர்கள் நிச்சயம் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதை உணர முடியும்.
எனது தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீஙகள் நேர்வழி அடைவீர்கள் என்ற இந்த வாசகத்தில் நட்சத்திரங்களுடன் ஸஹாபாக்கள் ஒப்பிடப்படுகிறார்கள்.
அதாவது நட்சத்திரங்களில் எதைப் பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்து கொள்வது போல் ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழியடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளது. இந்த உவமை எவ்விதத்திலும் சரியானதன்று. ஏனெனில் நட்சத்திரங்களில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் தான் திசை காட்ட முடியும் அனைத்து நட்சத்திரங்களும் திசை காட்டுவதில்லை. எந்த நட்சத்திரத்தைப் பார்த்தாலும் நமக்கு திசைகளை அறிய முடிவதில்லை.
நட்சத்திரங்களில் எதன் மூலமாகவும் திசைகளை அறிவது போல் ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றியும் நேர்வழி அடையலாம் என்று கூறப்படுவதில் உவமை பொருத்தமாகப் படவில்லை.
அறிவுக்குப் பொருத்தமற்ற இது போன்ற தவறான உவமைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் கூறமாட்டார்கள். அவர்களின் பல பொன்மொழிகளை நாம் பார்க்கும் போது இது போன்ற தவறான உவமைகள் காணப்படவே இல்லை. இதன் காரணமாகவும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டபட்டது என்பதை  உணரமுடிகிறது.
இரண்டாவது தவறு     
நபித்தோழர்களில்  பல்வேறு தரத்தினர் இருந்துள்ளனர். சொல் முறைகளிலும் சிந்தனைகளிலும் அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வு இருந்துள்ளது. அவர்களின் அந்தஸ்தும் சமமானது அல்ல. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அவர்களிலும் சொர்க்கத்தின் நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்த பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்த நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது. அந்த இருவரில் கூட அபூபக்ரு (ரலி) அவர்கள் மிகமிக மேலான தகுதியைப் பெற்றவர்களாவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின்) வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள். எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான்.  மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையே நன்கு தெரிந்தவன். (57:10)
நபித்தோழர்களில் இவ்வளவு வேறுபாடு இருக்கும் போது அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று சொல்லி அனைவரையும் சமநிலையில் வைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா?
நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது எந்தக் கருத்தைப் பின்பற்றினாலும் நேர்வழி பெற முடியுமா? கருத்து வேறுபாடு தோன்றும் போது குர்ஆன் ஹதீஸ் இவ்விரண்டிலும் உரசிப் பார்க்கும்படி தானே அல்லாஹ் நமக்குப் போதனை செய்கிறான். எந்தக் கருத்தை வேண்டுமானாலும் பின்பற்றி பலவழி செல்லுங்கள் என்று அல்லாஹ் நமக்கு அனுமதிக்கவில்லையே.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
அல்குர்ஆன்(4:59)
இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று எப்படி நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்க  முடியும்.
இந்த இடத்தில் இமாம் இப்னு ஹஸ்மு அவர்கள் சில கேள்விகளைத் தொகுத்து இந்த ஹதீஸ் பொய்யென நிலை நாட்டுகிறார்கள் . அதை அப்படியே காண்போம்.
அல்லாஹ் தன் நபியைப் பற்றி அந்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இவர்தன் மனோ இச்சைப்படி எதையும் பேச மாட்டார். இது இறைவன் மூலமாக அறிவிக்கப்படுகின்ற செய்தியைத் தவிர வேறெதுவுமில்லை என்று கூறுகிறான். அது போல் அல்லாஹ் தன் வேதத்தைப் பற்றிக் கூறும் போது இது அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடம் இருந்து வந்திருக்குமானால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். என்று (அன்னிஸா அத்தியாயத்தின் 82 வது வசனத்தில் ) குறிப்பிடுகிறான். இறைவனிடமிருந்து வந்த இந்தக் குர்ஆனிலும் இறைச் செய்தியை எடுத்துச் சொன்ன நபிமொழிகளிலும் முரண்பாடுகள் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
எந்த சஹாபியையும் பின்பற்றலாமென்றால் ஒரு விஷயத்தில் சிலர் ஹலால் என்றும் வேறு சிலர் ஹராம் என்றும் கூறியிருக்கும் போது எதையும் பின்பற்றி இரண்டு பிரிவுகளாக நாம் ஆக வேண்டுமா? அவ்வாறு பிளவுபடுவதை அல்லாஹ் அனுமதிப்பானா? மாறாக அல்அன்பால் என்ற அத்தியாயத்தில் 46வது வசனத்தில் பிளவுபடுவதைக் கண்டிக்கவே செய்கிறான்.
இவ்வாறு பல கருத்துக்கள் நபித்தோழர்களிடம் காணப்படும் போது அல்லாஹ்வின் வேதத்திலும் அவனது தூதரின் பொன் மொழியிலும் உரசிப் பார்த்து எது குர்ஆன் ஹதீஸிற்கு பொருத்தமானது என்று பார்க்கும்படி தான் அல்லாஹ் உத்தரவிடுகிறான்.
இந்த ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று சமுரத் இப்னு ஜ‚ன்துப் என்ற நபித் தோழர் கூறியுள்ளார்களே இந்தக் கருத்தை குர்ஆன் ஹதீஸில் உரசிப்பார்க்கக் கூடாதா?
நோன்பு வைத்துக் கொண்டு பனிக்கட்டிகளைச் சாப்பிடலாம் ஏனெனில் அது உணவுமல்ல பானமுமல்ல என்று அபூதல்ஹா என்ற நபித் தோழர் கருத்து தெரிவித்துள்ளார்களே அதைப்பின் பற்றி நாம் அவ்வாறு செய்தால் நேர்வழி அடைய முடியுமா? நமது நோன்பு முறியாமலிருக்குமா? அப்படி யாராவது ஃபத்வா கொடுத்தால் அவர் நேர் வழியில் இருப்பதாக நாம் ஒப்புக் கொள்ள முடியுமா?
இப்படி ஒரு நிலமையை நபி ஸல் அவர்கள் அங்கீகரிப்பார்களா? என்று இப்னு ஹஸ்ம் ரஹ் அவர்கள் கூறிவிட்டு இன்னும் ஏராளமான மஸ்அலாக்களில் ஸஹாபாக்களின் வேறுபட்ட பல முடிவுகளை வரிசைப்படுத்துகிறார்கள்.
(அல்இஹ்காம் பாகம்:2,பக்கம் :83)
கருத்து வேறுபாடு தோன்றும் போது எவரை வேண்டுமானாலும் பின்பற்றும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட்டுச் செல்லவில்லை. மாறாக இரண்டை விட்டுச் செல்கிறேன் என்று தான் கூறினார்கள். அவ்விரண்டையும் பின்பற்றும் வரை தான் வழி தவறவே மாட்டீர்கள் என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் சரியற்றது என்று நன்றாகத் தெரிந்த பின்னரும் இது ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் சரியற்றது தான், ஆனால் கஷ்பு என்னும் வெளிப்பாடு உடையவர்களிடத்தில் அது சரியானது தான் என்று கூறி ஷஃரானி போன்றவர்கள் சரி காண முயல்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளில் தங்கள் சுய கருத்துக்களை இடம் பெறச் செய்வதாகும். இது மக்களைத் திசை திருப்பும் செயலாகும்.
ஆக இந்த ஹதீஸ் திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. ஸஹாபாக்களின் மதிப்பு என்பது வேறு!
அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து என்பது வேறு!
அவர்களில் எவரையும் ஆராயாமல் பின்பற்றலாம் என்பது வேறு!
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவோருக்கு நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வன்மையான எச்சரிக்கையை நினைவு படுத்துகிறோம்.
எவன் என் மீது இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.
(ஆதாரம்:புகாரி107)
இது சரியற்ற ஹதீஸ் என்று தெளிவாக விளக்கப்பட்ட பின்னரும் இந்த ஹதீஸ் மேடைகளில் சொல்லப்படுமானால் அதைச் சொல்லுகின்றவர்களை அணுகி  தக்க ஆதாரங்ளைக் கேட்பது பொதுமக்கள் கடமையாகும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுடைய எச்சரிக்கையை மதித்து பொய்களைக் களைந்து நரகிற்குச் செல்வதிலிருந்து மீட்சி பெற்று ஜன்னத்திற்கு செல்வோமாக.
இது குறித்து அல்ஜன்னத்தில் கேட்கப்பட்ட எதிர்க்கேள்விக்கு பீஜே அளித்த பதில்
என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸின் தவறைச் சுட்டிக் காட்டும் போது விண்மீன்களில் எதைப் பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்து கொள்வது போல் சஹாபாக்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பொதுவாக உவமை கூறும் போது அப்பொருளின் பொதுவான தன்மைகளையே எடுத்துக் கொள்வர். உதாரணமாக கொத்தவரங்காய் போன்றவன் என்றால் ஒல்லியாக இருக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்வோம். பச்சைப் பசேலென்று இருக்கிறான் என யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அது போல விண் மீன்களைப் போன்றவர்கள் என்றால் ஒளி மிக்கவர்கள் என்ற பொதுவாக எல்லா நட்சத்திரங்களுக்கும் இல்லாத அம்சத்தை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் ?????
என்.கிஷார் முஹம்மது நதீம், நாகர் கோவில்.
உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்குமுன் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் நினைவு படுத்திக் கொள்கிறோம். விமர்சனத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட அந்த ஹதீஸ் தவறானது என்பதற்கு நீங்கள் சுட்டிக் காட்டியது மட்டும் காரணமல்ல. வேறுபல காரணங்களையும் நாம் எழுதி இருக்கிறோம். முக்கியமாக அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் அல்ல. அடுத்து பல குர்ஆன் வசனங்களுடனும் நபிமொழிகளுடனும் அது நேரடியாக மோதுகின்றது. இந்தக் காரணங்களுக்காகத் தான் அந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது.
உவமை கூறப்படும் போது பொதுவான அம்சங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. கொத்தவரங்காய் சமாச்சாரத்திலும் நமக்கு ஆட்சேபணை இல்லை.
திசை காட்டுபவை என்பதைக் கருத்தாகக் கொண்டதற்கு நியாயமான காரணம் உண்டு. என் தோழர்கள் விண்மீன்கள் போன்றவர்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் ஒளிமிக்கவர்கள் என்று நாம் கருத்துக் கொள்ளலாம். என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்று கூறிவிட்டு எனவே அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வாக்கிய அமைப்பின்படி எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடைவதற்கு முதலில் கூறப்பட்ட உவமையே ஆதாரமாக்கப்படுகிறது.
அதாவது அவர்கள் விண் மீன்களைப் போல் இருக்கின்ற காரணத்தால் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று அந்த வாக்கியம் விளக்குகின்றது. எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற கருத்துக்கு அந்த உவமை ஆதாரமாக்கப்படுவதால்  விண் மீன்களில் அந்தத் தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். எந்த விண்மீனும் வழிகாட்டும் தன்மை பெற்றிருக்க வேண்டும். விண்மீன்களில் அத்தகைய தன்மை இல்லை. எனவே உவமை பொருந்தவில்லை என்று நாம் எழுதினோம் இந்தக் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நாம் சுட்டிக்காட்டிய மற்ற காரணங்களால் சரியானதல்ல என்று உணரலாம்.
(1998 பிப்ரவரி மாதம் அல்ஜன்னத் இதழில் சகோதரர் P.ஜைனுல்ஹாப்தீன் ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை)  ஜசகல்லாஹ்....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்